Monday, September 14, 2009

மிக அகலமான சாலை இரு புறமும் வெட்டப்பட்ட மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தோன்றியிருக்கும் சிறு வீடுகள் நடுநடுவே சில மாடிவீடுகள்,பேருந்து வழுக்கிக் கொண்டு ,புதிதாக வந்த திரைப்பட பாடலுடன் சென்றுகொண்டிருந்தது . மெல்லிய பனிகாற்று ,வான போர்வையை விலக்கி சிவந்த கண்களுடன் சிரிக்கும் சூரியக்குழந்தையின் மென்மையான கதிர் கைகள் இவை உடலுக்கும் மனதிற்கும் இதமாக இருந்தது . நான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தின் பெயரை நடத்துனர் ஓங்கி ஒலிக்க ,பரவாயில்லை அரை மணி நேரத்தில் வந்துவிட்டோம் என் மனம் மகிழ ,கால்கள் இறங்கி நடக்க ஆரம்பித்தன , படபடக்கும் பட்டாம் பூச்சிகளையும் , காளைமாடுகளையும் , கறவை மாடுகளையும் ,கிராமத்திற்கே உரிய சலசலப்பையும் காணவில்லை , இன்னும் சொல்லப்போனால் காலை ஆறு மணியாகியும் எந்த வீடும் திறக்கப்படவில்லை .சாலை அகலமாக்கம் செய்யபட்டிருந்ததால் விநாயகர் வீற்றிருந்த அரச மரம் அங்கு இல்லை ,விநாயகரோ ஒரு வீட்டு சுவற்றில் ,கூண்டுக்குள் அடைக்கப்பட்டு விளக்கு கூட ஏற்றப்படாமல் அமர்ந்திருந்தார் .என் கைகள் குவிந்தன ,என் மனம் குவியவில்லை .சற்றுதூரத்தில் உள்ள என் ஆறு வீட்டை பார்த்தால் பழைய வீடு இல்லை சிறிய தளம் போட்ட வீடு இருந்தது .அருகே சென்றால் உள் பக்கம் தாழ்பாள் போட்டிருந்தது 'ஆறு ஆறு ' இருமுறை குரல் கொடுத்ததும் யாரும் வரவில்லை .லேசாக கதவை தட்டியபோது ,'யாருடா இவ்வளவு சீக்கிரம் வந்து கதவை தட்டுவது , முனகியபடியே ஆறு வந்தான் , என்னடா ஆறு எப்படியிருக்கிறாய் என்றவுடன் ,இருக்கிறேன் .ஆமா இவ்வளவு சீக்கிரமா ஏன்டா வந்த , நாங்க எழுந்துக்க மணி ஏழு ஆகுமே , சரி சரி வா சலிப்புடன் கதவைத்திறந்தான் .ஐந்து மணிக்குள் எழுந்து குளித்துவிடும் கிராம மக்கள் இப்பொழுது எழுவது ஏழு மணி -இதுதான் கால மாற்றம் என்பதா - என்மனம் என்னை கேள்வி கேட்டது - எனக்கு பதில் தெரியவில்லை .