Sunday, May 31, 2009
'சரி நீ எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப்போகிறாய்' , ஆறுமுகம் கண்ணடித்தான். 'நீ சொல்வதை பார்த்தால் பயமாக இருக்கிறது ,இரண்டு கயிறுக்கும் நடுவில் மாட்டிக்கொள்ளகூடாதே ',என்று நான் சொன்னதும் என் தலையில் ஒரு தட்டுதட்டி ' இது இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதை மாதிரிதான்,இரண்டு பக்கமும் சாயக்கூடாது கீழேயும் விழக்கூடாது ,புரியுதா .ஒழுங்கா சீக்கிரம் திருமணப்பத்திரிக்கை அனுப்பிவை 'என்று கட்டளையிட்டான் . அதை ஏற்றுக்கொண்டேன் . எங்கள் இருவருக்கும் மிக அருகில் பின்பக்கம் மிதிவண்டிஒன்று மணியடித்தபடி உரசிக்கொண்டு வந்து நின்றது , திரும்பிப்பார்த்தால் ஆறுமுகத்தின் மாமா மகன் செல்வம் ' மச்சான் ஓரமாக போகக்கூடாதா இன்னும் கொஞ்சம்னா இடிதிருப்பேன் ' டோய் மாப்பிள்ளை எங்கள இடிச்சுட்டு நீ வீடு போய் சேரமாட்டாய் ' என்று வண்டியை பிடித்து இழுத்தான் ,கீழே விழப்போன அவனை தூக்கி நிறுத்தி ' போ மாப்பிள்ளை ஒழுங்கா வீடு போய் சேர் ' என்று அனுப்பிவைத்தான் . உறவுகளுக்குள் கிண்டல் கேலி செய்வதே ஒரு தனி சுகம் தெரியுமா ,அது உள் மனதில் மகிழ்ச்சியை தருகிறது , உறவுகளே இல்லை என்றால் ஒருவன் பைத்தியமாகிவிடுவான் தெரியுமா என்றேன் . 'தமிழ் இந்த கிராம வாழ்கையில் உறவுகள் அதிகம் , நல்லது கெட்டது எது என்றாலும் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள் ,அங்கு பகைமை போய்விடும் நன்மையே நடக்கும் ' இன்னும் ஏதேதோ பேசிக்கொண்டே நடந்தோம் ,மீண்டும் பள்ளிக்கூடம் அருகில் வந்துவிட்டோம் .அந்த தமிழ் ஆசிரியர் பெண் பிள்ளைகளுக்கு பாரதியாரின் கும்மியடி பாட்டுக்கு நடனம் சொல்லிக்கொடுதுக்கொண்டிருந்தார் ,பிள்ளைகளும் காலை பின்னிப்பின்னி கோலால் தட்டித்தட்டி அழகாக ஆடிக்கொண்டிருந்தன. ஒரே மாதிரி அந்த கோல் தட்டப்படும் போது ஏற்ப்படும் ஓசையும், பாட்டின் இனிமையும் நமது நடன கலாச்சாரத்தை பறைசாற்றின .
Wednesday, May 6, 2009
சுற்றிப்பார்த்தால் சற்று தொலைவில் ஆறு வந்து கொண்டிருந்தான் .அருகில் வந்தவன் "என்னடா தூங்கிவிட்டாயா"என்றபடி கட்டிலில் அமர்ந்தான் ."ஆமாடா இதுவரை சாப்பிடாத ருசியான நமது பாரம்பரிய சாப்பாடு ,அதிகமாக போட்டு விட்டாய் அதனால்தான் தூக்கம் "அப்ப உன் மேல் தப்பில்லை ,சாப்பாடு போட்டவன் மேல்தான் தப்பு ,என்று சிரித்தான் ."டேய் மனிதன் யாராவது தான் செய்த தவறை ஒத்துக்கொண்டுள்ளனா ,நானும் சராசரி மனிதன்தான் ,மகாத்மா அல்ல " "இன்னும் நீ மாறவில்லை எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருக்கிறாய் " என்றான். மீண்டும் நடக்க ஆரம்பித்தோம் ,சற்று தொலைவில் உள்ள குளத்தில் முகத்தை கழுவினோம். மீன்கள் துள்ளிகுதித்து விளையாடின ,சிறு வயதில் துண்டை விரித்து மீன் பிடித்த ஞாபகம் வந்து போனது ,இனி அந்த நாட்கள் திரும்ப வருமா ,இதோ நாங்கள் கபடி விளையாடிய களம் இப்போதும் சில சிறுவர்கள் விளையடிக்கொண்டிருந்தார்கள் ,என் மனம் ஏங்கியது ,பெருமூச்சும் வந்தது .சிறிது தூரம் நடந்தோம் . " சரி ஆறு திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது "என்றேன்.அவனோ " திருமணத்துக்கு முன்பு எப்போது எப்போது என்று கேட்ட மனது .திருமணம் முடிந்து ஒரு வாரம் நன்றாகவே இருந்தது ,ஒரு மாதத்தில் லேசான சலிப்பு தட்டியது ,இப்போது ஆறு மாதமாகிவிட்டது,லேசாக புரிய ஆரம்பித்திருக்கிறது ,பாசக்கயிற்றுக்கும் ,தாலிக்கயிற்றுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டேன் என்று " " எனக்குப்புரியவில்லை " என்றேன் . " ஆமாடா தாய் என்கிற பாசக்கயிற்றுக்கும் , மனைவி என்கிற தாலி க்கயிறுக்கும் நடுவில் வில்லாய் வளைந்து கொடுக்கிறேன் .தாயிடம் பாசம் இருக்கிறது ,மனைவியிடம் ஆசை இருக்கிறது ,இது இரண்டுமே எனக்கு தேவைப்படுகிறது ,ஆனால் அவர்களோ ஏதாவது ஒன்றுதான் வேண்டும் என்கிறார்கள் .என்னசெய்வது இரண்டுக்கும் நடுவில் நிற்க்கிறேன் " என்றான் - தொடரும் ( பிழையிருந்தால் பொறுத்தருள்க)
Friday, May 1, 2009
இருவரும் மெதுவாக வரப்பின் மீது நடந்தோம்,கடந்த கால நினைவுகள் எங்கள் மனதை நனைத்திருந்தது ,வெளியில் வெயில் அடித்தாலும் மனம் குளிர்ந்திருந்தது ,பாதி வயலை கூட கடந்திருக்கமாட்டோம் மதியம் மணி ஒன்றை கடந்திருந்தது , ஒரு பெண் தலையில் சாப்பாட்டு கூடையுடன் வந்து "அய்யா,அம்மா சாப்பாடு கொடுத்துவிட்டிருக்கிறார்கள் சூடாக சாப்பிட சொன்னார்கள் "என்றார்.இருவரும் அருகில் இருந்த புங்கை மரத்தடியில் உட்கார்ந்தோம் . தலைவாழையில் முதலில் இனிப்பு பணியாரம் வைத்தார்கள் மூக்கில் சென்ற வாசனை நாக்கில் எச்சில்வூற வைத்தது ,சுவைத்தேன், தேனடை தோற்றது . அடுத்து வைத்த உளுந்த வடையோ பஞ்சாய் வாயில் கரைந்தது , வெள்ளிநூல் போலிருந்த அரிசி சாதமும், அதில் போட்ட முருங்கை கீரை சாம்பாரும் நாக்கை சப்புக்கொட்ட வைத்தது, போதும் என்று சொல்ல வாய் வரவில்லை ,கடைசியாக பால் பாயசம் தொண்டை வழியாக வழுக்கி இதயத்தையே நிறைத்தது . சாப்பிட்டு முடித்தோம் அருகில் இருந்த கயிற்று கட்டிலில் சிறிது படுக்கலாம் என்று படுத்தேன் ,பாய் சுருட்டுவது போல் என் கண் இமை மூடிக்கொண்டது ,என்னை அறியாமலே தூக்கம் எனை தூக்கி சென்றது , கண் திறந்து பார்த்தபோது மணி நான்கை நெருங்கி இருந்தது - தொடரும்
Subscribe to:
Posts (Atom)