Monday, March 15, 2010

அங்கிருந்த நாற்காலியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் .வெளியிலிருந்து ஒரு பெண் உள் வந்து எனக்கு பின்னால் இருந்த மின்சார பொத்தானை அழுத்தினாள் ,எங்கோ மின் நீர் இறைப்பான் ஓடும் சப்தம் கேட்டது ,சப்தம் வந்த பக்கத்திலிருந்து ,ஒரு வாளி தண்ணீருடன் வந்து முற்றத்தில் தெளிக்கும் சப்தம் கேட்டது .என் மூளைக்கு புரிந்தது அவள் வீட்டு பணியாள் என்று .திரும்ப உள்ளே வந்த அவள் என்னையே பார்த்தபடி அடுத்த அறைக்குள் நுழைந்தாள் , சிறிது நேரத்தில் பால் காயிப்பான் விசில் அடித்து ஓய்ந்ததும் ,கையில் நான்கு குவளையுடன் எனை தாண்டி இன்னொரு அறைக்கதவை மெதுவாக திறந்து ,"அம்மா ,அம்மா எழுந்திருங்கம்மா மணி ஏழு ஆவுது ,அய்யா இந்தாங்க இந்த காபி எடுத்துக்கோங்க அய்யா இது தான் உங்களுக்கு சக்கரை இல்லாம போட்டது ,சரி அய்யா வெளியில ஒருத்தர் ரொம்பநேரமா இருக்காரே யார்யா அவரு . 'ஆமா அவன்தான் என் சின்ன வயசு நண்பன் ,அவனுக்கும் காபி கொடு போ "என்றதும் வெளியே வந்து பின்னர் என்னிடமும் ஒரு காபி கொடுத்தாள் ,காபியில் நுறை இருந்தது ,பழைய ருசி இல்லை .மணி ஏழு அடித்து ஓய்ந்தது ,ஆனால் யாரும் எழுந்ததாக தெரியவில்லை

Monday, September 14, 2009

மிக அகலமான சாலை இரு புறமும் வெட்டப்பட்ட மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தோன்றியிருக்கும் சிறு வீடுகள் நடுநடுவே சில மாடிவீடுகள்,பேருந்து வழுக்கிக் கொண்டு ,புதிதாக வந்த திரைப்பட பாடலுடன் சென்றுகொண்டிருந்தது . மெல்லிய பனிகாற்று ,வான போர்வையை விலக்கி சிவந்த கண்களுடன் சிரிக்கும் சூரியக்குழந்தையின் மென்மையான கதிர் கைகள் இவை உடலுக்கும் மனதிற்கும் இதமாக இருந்தது . நான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தின் பெயரை நடத்துனர் ஓங்கி ஒலிக்க ,பரவாயில்லை அரை மணி நேரத்தில் வந்துவிட்டோம் என் மனம் மகிழ ,கால்கள் இறங்கி நடக்க ஆரம்பித்தன , படபடக்கும் பட்டாம் பூச்சிகளையும் , காளைமாடுகளையும் , கறவை மாடுகளையும் ,கிராமத்திற்கே உரிய சலசலப்பையும் காணவில்லை , இன்னும் சொல்லப்போனால் காலை ஆறு மணியாகியும் எந்த வீடும் திறக்கப்படவில்லை .சாலை அகலமாக்கம் செய்யபட்டிருந்ததால் விநாயகர் வீற்றிருந்த அரச மரம் அங்கு இல்லை ,விநாயகரோ ஒரு வீட்டு சுவற்றில் ,கூண்டுக்குள் அடைக்கப்பட்டு விளக்கு கூட ஏற்றப்படாமல் அமர்ந்திருந்தார் .என் கைகள் குவிந்தன ,என் மனம் குவியவில்லை .சற்றுதூரத்தில் உள்ள என் ஆறு வீட்டை பார்த்தால் பழைய வீடு இல்லை சிறிய தளம் போட்ட வீடு இருந்தது .அருகே சென்றால் உள் பக்கம் தாழ்பாள் போட்டிருந்தது 'ஆறு ஆறு ' இருமுறை குரல் கொடுத்ததும் யாரும் வரவில்லை .லேசாக கதவை தட்டியபோது ,'யாருடா இவ்வளவு சீக்கிரம் வந்து கதவை தட்டுவது , முனகியபடியே ஆறு வந்தான் , என்னடா ஆறு எப்படியிருக்கிறாய் என்றவுடன் ,இருக்கிறேன் .ஆமா இவ்வளவு சீக்கிரமா ஏன்டா வந்த , நாங்க எழுந்துக்க மணி ஏழு ஆகுமே , சரி சரி வா சலிப்புடன் கதவைத்திறந்தான் .ஐந்து மணிக்குள் எழுந்து குளித்துவிடும் கிராம மக்கள் இப்பொழுது எழுவது ஏழு மணி -இதுதான் கால மாற்றம் என்பதா - என்மனம் என்னை கேள்வி கேட்டது - எனக்கு பதில் தெரியவில்லை .

Sunday, July 19, 2009

2009 மார்கழி மாதம் மீண்டும் வருகிறேன் ....

இதுவரை என் நெருங்கிய நண்பன் ஆறுமுகத்தின் கிராமத்தில் உள்ள அவனது வீட்டிற்க்கு 1989 ஆம் ஆண்டு சென்று வந்ததை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன் .
20 வருடங்கள் கழித்து 2009 ஆம் ஆண்டு மீண்டும் அவனது கிராமத்திற்கு வந்திருக்கிறேன் , இனி அதை தங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன் .
அந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டிருந்த மாறுதல்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது ,
இவை அனைத்தும் நல்லதா தீயதா என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ,
தங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும் , புரிந்ததை எனக்கும் தெரிவித்தால் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன் .

Thursday, July 16, 2009

காலம் கரையத் தொடங்கியது ,சூரியன் தன் வர்ண வித்தைகளை வானத்திரையில் சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டு வந்து வீட்டிற்க்கு சென்று விட்டான் ,நாங்களும் வீட்டிற்க்கு வந்து விட்டோம், கறந்த பசும் பாலில் போட்ட காபியில் பறந்த வாசனை மூக்கு வழியாக மூளைக்குள் சென்றது .மூளை சுறுசுறுப்பானது ,மாலை மணி ஆறை தாண்டியிருந்தது .ஆறுவின் அக்காள் நிலவொளி வந்திருந்தார்கள் ,எனை பார்த்து டேய் ' நீ தமிழா ' என்றார்கள் .'இல்லை நான் தெலுங்கு' என்றேன் .டேய் இன்னும் அந்த வாய் கொழுப்பு அப்படியே இருக்குதுடா ( எனது அம்மா அப்பாவை விசாரித்தார்கள் - நன்றாக இருக்கிறார்கள் என்றேன் ) அப்பொழுது இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று அக்காவின் காலை ஓடிவந்து கட்டிக்கொண்டது .' அக்கா இது யாருக்கா ' என்று அந்த குழந்தையை தூக்கினேன்,அது விசும்ப ஆரம்பித்தது , ' உன் பெயர் என்ன என்றேன் . அழவே ஆரம்பித்து விட்டது , அக்காவாங்கிக்கொண்டு .அவ பெயர் மின்மினி என்றார்கள் , என்ன அருமையான பெயர் என்று நான் சொல்ல ,ஆறுமுகமோ ' மின்மினிபூச்சின்னு பெயர் வைத்திருக்கலாம் ,கையையும் காலையும் பாரு சின்னசின்னதா பூச்சி மாதிரியே ' அக்காவுக்கு கோபம் வந்தது
'அவ கலரப்பாருடா ' என்றார் . ஆறுவும் விடுவதாக இல்லை . 'ஆமா கரிச்சட்டி மாதிரியே இருக்கு' என்றவுடன் ,அக்காவுக்கு கோபம் அதிகமாகி , அம்மாவிடம் ' அவனை வாயை மூட சொல்லுங்கம்மா ,இல்லேன்னா அவ அப்பாகிட்ட சொல்லிடுவேன்னு ' என்று சொல்ல . ஆமா மச்சான் என்ன பெரிய சூரரா , இரண்டு சிங்கத்தை கட்டி ஏர் உளுதரா ,அப்படியே பயந்துருவோம் ' என்று சொல்லிமுடிப்பதற்குள் ,ஆறுவின் மச்சானே உள்ளே வந்தார் . ' வாங்க மச்சான்
உக்காருங்க என்று நாற்காலியை எடுத்து போட்டான் . ( எதுவுமே நடக்காதது போல் ) அக்கா விடவில்லை ' இதபாருங்க நம்ம பொண்ண கரிச்சட்டியாம் ,பூச்சியாம், அதுபரவாயில்லை ,மச்சான் என்ன இரண்டு சிங்கத்த கட்டி உளுதரா .என்ன பண்ணிடுவாருன்னு கேட்கிறாங்க , நீங்க என்னென்னு கேளுங்க ' என்று போட்டுக்கொடுக்க ,மச்சானோ லேசாக சிரித்தவாறே ' என்ன மாப்பிளே ' ஒங்க அக்காவையே கெட்டியிருகேன் ,சிங்கத்தயா கெட்டமுடியாது ' என்றார் ,எல்லோரும் சிரிக்க , வீடே கலகலப்பானது . ( இந்தமாதிரி சந்தோஷம் எங்கு இருக்கிறதோ அங்கு நோய் இருக்காது ) ' சரி ஆறுமுகம் நான் கிளம்புகிறேன் ,பேருந்துக்கு நேரமாகிறது ' என்றேன் . எட்டு மணிக்குதான் பேருந்து அதற்க்குள்
சாப்பிடலாம் வா ' என்றான் .அக்கா .மச்சான் . குழந்தை, நான் எல்லோரும் சாப்பிட அமர்ந்தோம் , சுடச்சுட சோறும் பசும் பாலும் ,வீட்டில் சுட்ட முறுக்கும் , வாழைப்பழமும் மீண்டும் வயிற்றை நிரப்ப ,இன்று நடந்த எல்லாம் என் மனதை நிரப்ப , கையை மட்டும் கழுவிக்கொண்டேன் . அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டேன் .பேருந்து ஏற்ற ஆறு வந்தான் ,பேருந்தின் முன் முகப்பு விளக்கு தெரிய ஆரம்பித்ததும் ,என் கையை பிடித்துக்கொண்டான் ,'டேய் அடிக்கடி வாடா ' என்றான் .அருகில் வந்த பேருந்தின் முகப்பு வெளிச்சம் ,அவன் கண்களில் பெருக்கெடுத்து நின்ற நீரில் பட்டு எதிரொளித்தது . சரி என்ற வார்த்தைக்குமேல் என்னாலும் பேசமுடியவில்லை .நட்பு தொண்டையை அடைத்துக்கொண்டது .பேருந்து அருகில் வந்தது . என் உடல் ஏறிக்கொண்டது . மனதோ சிரமப்பட்டு உள்ளே திணிதுக்கொண்டது . இருவரும் கையசைதுக்கொண்டோம் , மனதை அசைக்க முடியவில்லை . -தொடரும்

Sunday, May 31, 2009

'சரி நீ எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப்போகிறாய்' , ஆறுமுகம் கண்ணடித்தான். 'நீ சொல்வதை பார்த்தால் பயமாக இருக்கிறது ,இரண்டு கயிறுக்கும் நடுவில் மாட்டிக்கொள்ளகூடாதே ',என்று நான் சொன்னதும் என் தலையில் ஒரு தட்டுதட்டி ' இது இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதை மாதிரிதான்,இரண்டு பக்கமும் சாயக்கூடாது கீழேயும் விழக்கூடாது ,புரியுதா .ஒழுங்கா சீக்கிரம் திருமணப்பத்திரிக்கை அனுப்பிவை 'என்று கட்டளையிட்டான் . அதை ஏற்றுக்கொண்டேன் . எங்கள் இருவருக்கும் மிக அருகில் பின்பக்கம் மிதிவண்டிஒன்று மணியடித்தபடி உரசிக்கொண்டு வந்து நின்றது , திரும்பிப்பார்த்தால் ஆறுமுகத்தின் மாமா மகன் செல்வம் ' மச்சான் ஓரமாக போகக்கூடாதா இன்னும் கொஞ்சம்னா இடிதிருப்பேன் ' டோய் மாப்பிள்ளை எங்கள இடிச்சுட்டு நீ வீடு போய் சேரமாட்டாய் ' என்று வண்டியை பிடித்து இழுத்தான் ,கீழே விழப்போன அவனை தூக்கி நிறுத்தி ' போ மாப்பிள்ளை ஒழுங்கா வீடு போய் சேர் ' என்று அனுப்பிவைத்தான் . உறவுகளுக்குள் கிண்டல் கேலி செய்வதே ஒரு தனி சுகம் தெரியுமா ,அது உள் மனதில் மகிழ்ச்சியை தருகிறது , உறவுகளே இல்லை என்றால் ஒருவன் பைத்தியமாகிவிடுவான் தெரியுமா என்றேன் . 'தமிழ் இந்த கிராம வாழ்கையில் உறவுகள் அதிகம் , நல்லது கெட்டது எது என்றாலும் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள் ,அங்கு பகைமை போய்விடும் நன்மையே நடக்கும் ' இன்னும் ஏதேதோ பேசிக்கொண்டே நடந்தோம் ,மீண்டும் பள்ளிக்கூடம் அருகில் வந்துவிட்டோம் .அந்த தமிழ் ஆசிரியர் பெண் பிள்ளைகளுக்கு பாரதியாரின் கும்மியடி பாட்டுக்கு நடனம் சொல்லிக்கொடுதுக்கொண்டிருந்தார் ,பிள்ளைகளும் காலை பின்னிப்பின்னி கோலால் தட்டித்தட்டி அழகாக ஆடிக்கொண்டிருந்தன. ஒரே மாதிரி அந்த கோல் தட்டப்படும் போது ஏற்ப்படும் ஓசையும், பாட்டின் இனிமையும் நமது நடன கலாச்சாரத்தை பறைசாற்றின .

Wednesday, May 6, 2009

சுற்றிப்பார்த்தால் சற்று தொலைவில் ஆறு வந்து கொண்டிருந்தான் .அருகில் வந்தவன் "என்னடா தூங்கிவிட்டாயா"என்றபடி கட்டிலில் அமர்ந்தான் ."ஆமாடா இதுவரை சாப்பிடாத ருசியான நமது பாரம்பரிய சாப்பாடு ,அதிகமாக போட்டு விட்டாய் அதனால்தான் தூக்கம் "அப்ப உன் மேல் தப்பில்லை ,சாப்பாடு போட்டவன் மேல்தான் தப்பு ,என்று சிரித்தான் ."டேய் மனிதன் யாராவது தான் செய்த தவறை ஒத்துக்கொண்டுள்ளனா ,நானும் சராசரி மனிதன்தான் ,மகாத்மா அல்ல " "இன்னும் நீ மாறவில்லை எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருக்கிறாய் " என்றான். மீண்டும் நடக்க ஆரம்பித்தோம் ,சற்று தொலைவில் உள்ள குளத்தில் முகத்தை கழுவினோம். மீன்கள் துள்ளிகுதித்து விளையாடின ,சிறு வயதில் துண்டை விரித்து மீன் பிடித்த ஞாபகம் வந்து போனது ,இனி அந்த நாட்கள் திரும்ப வருமா ,இதோ நாங்கள் கபடி விளையாடிய களம் இப்போதும் சில சிறுவர்கள் விளையடிக்கொண்டிருந்தார்கள் ,என் மனம் ஏங்கியது ,பெருமூச்சும் வந்தது .சிறிது தூரம் நடந்தோம் . " சரி ஆறு திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது "என்றேன்.அவனோ " திருமணத்துக்கு முன்பு எப்போது எப்போது என்று கேட்ட மனது .திருமணம் முடிந்து ஒரு வாரம் நன்றாகவே இருந்தது ,ஒரு மாதத்தில் லேசான சலிப்பு தட்டியது ,இப்போது ஆறு மாதமாகிவிட்டது,லேசாக புரிய ஆரம்பித்திருக்கிறது ,பாசக்கயிற்றுக்கும் ,தாலிக்கயிற்றுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டேன் என்று " " எனக்குப்புரியவில்லை " என்றேன் . " ஆமாடா தாய் என்கிற பாசக்கயிற்றுக்கும் , மனைவி என்கிற தாலி க்கயிறுக்கும் நடுவில் வில்லாய் வளைந்து கொடுக்கிறேன் .தாயிடம் பாசம் இருக்கிறது ,மனைவியிடம் ஆசை இருக்கிறது ,இது இரண்டுமே எனக்கு தேவைப்படுகிறது ,ஆனால் அவர்களோ ஏதாவது ஒன்றுதான் வேண்டும் என்கிறார்கள் .என்னசெய்வது இரண்டுக்கும் நடுவில் நிற்க்கிறேன் " என்றான் - தொடரும் ( பிழையிருந்தால் பொறுத்தருள்க)

Friday, May 1, 2009

இருவரும் மெதுவாக வரப்பின் மீது நடந்தோம்,கடந்த கால நினைவுகள் எங்கள் மனதை நனைத்திருந்தது ,வெளியில் வெயில் அடித்தாலும் மனம் குளிர்ந்திருந்தது ,பாதி வயலை கூட கடந்திருக்கமாட்டோம் மதியம் மணி ஒன்றை கடந்திருந்தது , ஒரு பெண் தலையில் சாப்பாட்டு கூடையுடன் வந்து "அய்யா,அம்மா சாப்பாடு கொடுத்துவிட்டிருக்கிறார்கள் சூடாக சாப்பிட சொன்னார்கள் "என்றார்.இருவரும் அருகில் இருந்த புங்கை மரத்தடியில் உட்கார்ந்தோம் . தலைவாழையில் முதலில் இனிப்பு பணியாரம் வைத்தார்கள் மூக்கில் சென்ற வாசனை நாக்கில் எச்சில்வூற வைத்தது ,சுவைத்தேன், தேனடை தோற்றது . அடுத்து வைத்த உளுந்த வடையோ பஞ்சாய் வாயில் கரைந்தது , வெள்ளிநூல் போலிருந்த அரிசி சாதமும், அதில் போட்ட முருங்கை கீரை சாம்பாரும் நாக்கை சப்புக்கொட்ட வைத்தது, போதும் என்று சொல்ல வாய் வரவில்லை ,கடைசியாக பால் பாயசம் தொண்டை வழியாக வழுக்கி இதயத்தையே நிறைத்தது . சாப்பிட்டு முடித்தோம் அருகில் இருந்த கயிற்று கட்டிலில் சிறிது படுக்கலாம் என்று படுத்தேன் ,பாய் சுருட்டுவது போல் என் கண் இமை மூடிக்கொண்டது ,என்னை அறியாமலே தூக்கம் எனை தூக்கி சென்றது , கண் திறந்து பார்த்தபோது மணி நான்கை நெருங்கி இருந்தது - தொடரும்